ஞாயிறு, 6 ஜூலை, 2014

யார் குற்றம்?

அன்றாடம் வெளியாகும் பத்திரிகை செய்திகளைப் பார்க்கும்போது, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர சம்பவங்கள்,  அதிகரித்து விட்டது நன்றாகவே தெரிகிறது. ‛மனித மனதின் அடி ஆழத்தில், ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடக்கும் வக்கிரம்தான் இதற்கெல்லாம் காரணம்’ என்கின்றனர், உளவியல் வல்லுநர்கள்.
மனதை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட மனிதன், வக்கிர எண்ணங்களை வெற்றி கொண்டு விடுகின்றான்; மனதை ஆளத் தெரியாத மனிதன், வக்கிரங்களுக்கு அடிமையாகி விடுகிறான். வக்கிர எண்ணங்கள், வகைதொகையற்றவை. அவற்றின் உந்துதலே, உலகின் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம். மது, அவற்றை உந்தி மேலெழுப்பி, ஊருக்குள் அனுப்பி விடுகிறது. விளைவுகளே, அன்றாடம், பத்திரிகை செய்திகளாக இடம் பெறுகின்றன.
......
கரூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கிராமம் அது. அதிகபட்சம் 100 வீடுகள் இருக்கும். சாலையோரம் சில டீக்கடைகள், பெட்டிக்கடைகளை தவிர வேறு பெரிதாக சொல்லிக் கொள்வதற்கு எதுவுமில்லாத ஊர் அது.
இரவு 10 மணிக்கு மேலாகி விட்டால், அந்த ஊரில் போக்குவரத்து நெரிசல் தாறுமாறாக அதிகரித்து விடும். சில நேரங்களில், போலீசார் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிலைகூட ஏற்படுவதுண்டு. இப்படி பெரும்கூட்டம் கூடுவதால், இரவு ரோந்து  போலீசாருக்கு, அங்கு செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது.
அந்த வழியில் வாகனம் இயக்கும் டிரைவர்கள், கிளீனர்கள், வாலிப, வயோதிக அன்பர்கள் அனைவருக்கும் அத்துபடியான கிராமம் அது.  இரவுப்பணிக்காக தினமும் சேலம் சென்று திரும்பியபோதுதான், அந்த கிராமத்துக்கு இருக்கும் கிராக்கி,  தெரியவந்தது.
நான் பணி முடிந்து வீடு திரும்பும்போது, அதாவது அதிகாலை 2 மணிக்குக்கூட, அந்த கிராமத்தில் குறைந்தது 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், லாரிகள் நின்றிருக்கும். எதற்கு...? டீ குடிப்பதற்குத்தான்!  அதுவும் குறிப்பிட்ட கடையில் மட்டுமே கூட்டம் இருக்கும். மற்ற கடைகளில் எல்லாம் ஈ, கொசு கூட இருக்காது; கடைக்காரர்கள் தூங்கி வழிந்து கொண்டிருப்பர்.
குறிப்பிட்ட இந்த கடையில் மட்டும், ‛நான்-ஸ்டாப்’ ஆக, டீ போடும் வேலை நடந்து கொண்டே இருக்கும். டீயில் ஏதேனும் விசேஷம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்கத்தோன்றுமே? அதையும் சொல்லி விடுகிறேன். அதில் அப்படியொன்றும் சிறப்பில்லை. வழக்கமான கலப்படத்
தூள்; விலையும் வழக்கமான விலைதான். வேறு என்னதான், ஸ்பெஷல்...?
கடையில் கல்லாவில் இருக்கும் பெண் ஒருவர்தான், இவ்வளவு களேபரத்துக்கும் காரணம். அவர் ஒன்றும், மோசமானவர் அல்ல. அவரது பேச்சிலும், செய்கையிலும் யாரும் குறை கூற வாய்ப்பில்லை.
கல்லாப்பெட்டியில் அமர்ந்திருக்கும் அவர், வாடிக்கையாளர்களிடம் சிரித்த முகத்துடன் பேசும் வழக்கம் கொண்டவர். அவரது அழகும், சிரிப்பும் தான், ஏராளமானோரை கடைக்கு கவர்ந்திழுக்கின்றன என்பது சில நாட்களிலேயே எனக்குப் புரிந்து விட்டது. ஆனால், கடைக்கு செல்பவர்களில் பெரும்பகுதியினர், அவரது சிரிப்புக்கும், பேச்சுக்கும்தான் செல்கின்றனர் என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க செய்தி.
போலீசார் உட்பட அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும். கடையில் இருந்து வியாபாரம் செய்வதை யாராவது, தவறென்று சொல்ல முடியுமா? இப்படி டீக்கடையில் இருக்கும் பெண்ணுக்காக, பல் இளித்துக் கொண்டு திரியும் ஜொள்ளர்களால் எதுவும் அசம்பாவிதம் நேரிட்டு விடக்கூடாது என்பதற்காக, போலீசார் இரவு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு.
பிஞ்சுக் குழந்தையை கூட விட்டு வைக்காத கொடியவர்கள் சுற்றும் பூமியில், பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள், அதுவும் இரவு நேரத்தில் டீ குடிக்க வருவதெல்லாம் சாத்தியமா என்ன?


வியாழன், 3 ஜூலை, 2014

சத்திய சோதனை!

‛நல்லவர்களை கடவுள் அடிக்கடி சோதிப்பார்’ என்பது நாமறிந்த ஒன்றுதான். அன்று காலை 6 மணிக்கெல்லாம், எனக்கு கடவுளின் சோதனை ஆரம்பமாகி விட்டது. உயர் அதிகாரி தொலைபேசியில் அழைத்தார்.
‛‛ கோவிலுக்கு ஏழரை மணிக்கு வந்துடறேன். கொஞ்சம் வர முடியுமா?’’
வேண்டுதல் தொனி இருந்தாலும், அது உத்தரவுதான். அதிகாரியாயிற்றே! அவசரம் அவசரமாக குளித்து, உடைமாற்றி, கோவிலுக்கு ஓடினேன். கோவில் அர்ச்சகர்களை தெரியாது. ‛மரியாதை எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதிகாரி முன் நம் மானம் போய்விடும்’ என்று, படபடப்பாக இருந்தது.
‛தெரிந்த முகங்கள் இருக்கின்றனரா’ என, தேடினேன். நல்ல வேளையாக, ஊழியர்கள் இருவர் இருந்தனர். அவர்களுக்கு, வாயெல்லாம் பல்லாக சிரித்தபடி, வணக்கம்போட்டு, குசலம் விசாரித்து, விஷயத்தை சொன்னேன்.
‛அதுக்கென்ன சார், தாராளமா வரட்டும், சிறப்பா செஞ்சுருவோம்’ என்றார், கோவில் ஊழியர். லேசாக நிம்மதி வந்தது.
கோவில் வாசலில் காத்திருந்தேன். அதிகாரி, காரில் வந்தார்.
முன்கூட்டியே சிக்னல் தரப்பட்டிருந்தபடியால், கோவில் அர்ச்சகர்கள் இருவர் வந்து அதிகாரியை வரவேற்றனர். சன்னதி முன் உட்கார வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். அர்ச்சனை எல்லாம் செய்தாகி விட்டது. பரிவட்டம் கட்டி, மாலை மரியாதை செய்து, பிரசாதம் கொடுத்து, பெரிய கும்பிடுபோட்டு வழியனுப்பினர்.
அதிகாரிக்கு மிக்க மகிழ்ச்சி. ‛வெரிகுட், வெரிகுட்’ என்று பாராட்டினார். ‛ கோவிலை ஒரு சுத்து சுத்திரட்டுமா’ என்று கேட்டபடி புறப்பட்டார்.  ‛எப்படியோ, மிக எளிதில் சமாளித்து விட்டோம்’ என்று எனக்கு உள்ளூர கொண்டாட்டம்.
அதற்குள், கோவில் வாசலுக்கு கார் வந்து விட்டது. கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு, டிரைவர் காத்திருந்தார்.  கோவிலை சுற்றி வந்த அதிகாரி, எதையோ தேடிக் கொண்டிருந்தார். ‛ஏம்ப்பா, இங்கதான் விட்டிருந்தேன், காணமே’ என்றார். அவர் செருப்பைத்தேடுவதை, வினாடி நேரத்திலேயே புரிந்து கொண்டு விட்ட எனக்கு, நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.
ஐயோ! பதற்றத்தில் அங்குமிங்கும் ஓடினேன், இல்லையில்லை தேடினேன். அதிகாரியும்தான். ஓரிரு நிமிடங்கள் தேடிய அதிகாரி, பின் சுதாரித்துக் கொண்டார். ‛சரி விடுப்பா, பழைய செருப்புதான், போகட்டும், கார்ல ஷூ இருக்கு’ என்றபடி, காருக்குள் ஏறிக் கொண்டார். ‛சரி வரட்டுமா’ என்று, அவர் கூறிச் சென்று இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகியும், எனக்கு சுய நினைவே இல்லை.
கோவில் ஊழியர் வந்து கூப்பிட்டபோதுதான், நினைவு திரும்பியது. பெரும் அதிர்ச்சி. எல்லாவற்றையும் சிறப்பாக செய்து, செருப்பை கோட்டை விட்டு விட்டோமே! அதிகாரி கோபித்துக் கொள்வாரோ? கிலி பிடித்துக் கொண்டது. கோவில் ஊழியர், ‛‛சார், அதெல்லாம் எதுவும் நடக்காது. பகவான் மேல பாரத்தப்போட்டுருங்க சார்,’’ என்று ஆறுதலாக பேசினார்.
‛‛சரி சார், காலங்காத்தால யாராச்சும் செருப்பு திருடுவாங்களா’’
இது, எனது சந்தேகம்.
‛‛சார், நீங்க தேங்கா, பழம், மாலை எல்லாம் இங்க கடைல வாங்குனா, செருப்புக்கு பங்கம் வராது.  தேங்கா பழம் வாங்காமப்போனாலோ, இல்ல பிச்சைக்காரங்களுக்கு பிச்சை போடாம போனாலோ, செருப்ப காணாமப் போக்கிடுவாங்க. இதுல கடைக்காரங்களும், கோவில் வாசல்ல இருக்க பிச்சைக்காரங்களும் கூட்டு. இனியாவது உஷாரா இருந்துக்குங்க’’
இன்று ஒரு தகவல் மாதிரி, அன்று ஒரு உண்மையை நான் புரிந்து கொண்டேன். எப்போது, எந்த கோவிலுக்கு போனாலும், செருப்பில்லாமல் போவதுதான், நமக்கும் நல்லது; பாக்கெட்டுக்கும் நல்லது; பாவம், பகவானுக்கும் நல்லது. பிறகு, நாட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்னைகளை தீர்க்கவே, பகவான் ஓவர்டைம் பார்க்க வேண்டியிருக்கும். இதில், நமது செருப்புக்கெல்லாமா, அவர் காவல் இருப்பார்?

.....
திருப்பூரில் 20 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது. அந்த நிறுவனத்துக்குப்பிறகு, மூன்று நிறுவனங்கள் மாறி வி்ட்டேன் . ஆனாலும், மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்தாலே, வியர்த்துக் கொட்டி விடும். கடவுளின் சோதனையல்லவா?